மானாமதுரை, நவ.7: மதுரை ராமேஸ்வரம் நான்கு நெடுஞ்சாலையில் முத்தனேந்தல் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை, திருப்பூர், கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் தொலை தூர பேருந்துகளும் இந்த தேசியநெடுஞ்சாலையில் தான் செல்கின்றன. இந்த வழியாக செல்லும் பேருந்துகளில் முத்தனேந்தல், கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், வாகுடி, இடைக்காட்டூர், பதினெட்டாங்கோட்டை உள்ளிட்ட 34 கிராம மக்கள் முத்தனேந்தல் பஸ்ஸ்டாப்பில் நின்று தான் செல்கின்றனர். இது தவிர புகழ்பெற்ற இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச், இடைக்காட்டூர் சித்தர் கோயில், கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி சித்தர், மாயாண்டி சுவாமி சித்தர் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் பக்தர்களும் இங்கு நின்று தான் பேருந்தில் செல்கின்றனர்.இவ்வாறு முக்கிய பஸ்ஸ்டாப்பாக இருக்கும் முத்தனேந்தல் பகுதியில் நான்குவழிச்சாலை பணிகள் துவங்கும்போது பஸ்ஸ்டாப்பில் இருந்த நிழற்குடை இடிக்கப்பட்டது. கிராமத்தினர் கேட்டபோது சாலை அமைத்தபின் நிழற்குடை அமைக்கப்படும் என்று தெரிவித்த நிறுவனம் பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் நிழற்குடை அமைக்க வில்லை. இது குறித்து நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் காரைக்குடி, மதுரைக்கு சென்று நேரில் மனு கொடுத்தும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.