ஈரோடு, நவ.7: ஈரோட்டில் பர்னிச்சர் கடை ஊழியர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு மாரப்பா 3வது வீதியில் பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 15 பேர் வேலை செய்து வருகின்றனர். இதில், 6 பேர் வெளியூர்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக்குறிச்சியை சேர்ந்த பூபேஸ் (52) என்பவர் கடந்த 10 மாதமாக இந்த பர்னிச்சர் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் தங்கியிருந்த அறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து பக்கத்து அறையை சேர்ந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து உடனடியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் விசாரணை மேற்கொண்டார்.