காலாப்பட்டு, நவ. 6: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ் புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சங்குப்பம், ரங்கநாதபுரம், கெங்கை நகர், அனிச்சங்குப்பம், கீழ் புத்துப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக அனுமந்தை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கூறிய பகுதிகளில் உள்ள மின்கம்பிகளில் சாலையோரம் உள்ள மரக்கிளைகள் உரசுவதாக கூறி, அப்பகுதிகளில் உள்ள மரங்களை மின்துறையினர் வெட்டி அகற்றி வருகின்றனர். குறிப்பாக மேற்கண்ட பகுதிகளில் கிழக்கு கடற்கரை சாலையோரம் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மாமரம், புளியமரம், வேப்பமரம், பூவரசு மரம் உள்ளிட்ட பல மரங்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி வெட்டி அகற்றுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.