நத்தம், நவ. 6: நத்தம் அருகே சிறுகுடியில் மக்கள் ஒன்று கூடி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரியதால் அங்குள்ள ஊரணியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. நத்தம் அருகேயுள்ளது சிறுகுடி கிராமம். இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவ்வூரானது மலைகளுக்கும், குன்றுகளுக்கும் இடையில் பசுமை படர்ந்து காணப்படும் குறிஞ்சி நில அமைப்பை கொண்டதாகும். ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக இவ்வூரில் உள்ள ஊரணி வறண்டதுடன், அதன் குளிர்ச்சியான சூழ்நிலை மாறியது. மேலும் இங்கு நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்தில் செல்ல துவங்கியது. இதையறிந்து இளைஞர்கள் ஒன்று கூடி சிறுகுடி கிராம நலம் விரும்பிகள் என்ற அமைப்பை உருவாக்கினர். இதில் ஊரிலுள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சாதி, மத, பேதமின்றி அனைவரும் சேர்த்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடு வாழ் மக்களையும் ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து அனைவரின் பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் ஊரணிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. மேலும் கிராமங்களை சுற்றியுள்ள கண்மாய் கரைகளை தேர்வு செய்து பனை மற்றும் நிழல் தரும் மரங்களை நட்டனர். இதன் பலனாக கடந்த வாரம் பெய்த மழையினால் ஊரணிக்கு நீர்வரத்து ஏற்ப்டடு நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.