கொடைக்கானல், நவ. 6: கொடைக்கானலில் சீலை அகற்றி சட்டவிரோதமாக இயங்கி தங்கும் விடுதிக்கு நகராட்சி அதிகாரிகள் மீண்டும் சீல் வைத்ததுடன், உதவிய ஓட்டலின் மின் மற்றும் குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். கொடைக்கானல் பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட சுமார் 300 தங்கும் விடுதிகள் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த விடுதிகள் சட்டவிரோதமாக நீதிமன்ற உத்தரவை மீறி இயக்கப்படுவதாக நகராட்சிக்கு புகார் வந்தது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கொடைக்கானல் ஏழு ரோடு சாலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட தனியார் தங்கும் விடுதியை அதன் உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமலும், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாகவும் மீண்டும் திறந்து நடத்தி வந்துள்ளனர். மேலும் இதற்கு அருகிலுள்ள உணவு விடுதியில் இருந்து மின் இணைப்பு பெற்றதும் குறித்து பலர் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆணையாளர் முருகேசன் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை செய்தனர்.