திருவண்ணாமலை, நவ.6: தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு நிலுவை தொகை உடனடியாக வழங்காவிட்டால், மருந்து பாட்டிலுடன் கூட்டத்தில் பங்கேற்போம் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் அமுலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்ய உள்ள 44 பொருட்களுக்கு தடைவிதித்து, இதனை கைவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவை தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். கலெக்டர் 10 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் இதுவரை வழங்கவில்லை.