பழநி, நவ. 5: தொடர் மழையின் எதிரொலியாக பழநி பகுதி மானாவாரி நிலங்களில் தீவன புற்கள் வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. அதுபோல் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியும் அதிகளவு நடைபெறுகின்றன. பால் உற்பத்திற்கும், கால்நடைகள் வளர்ப்பிற்கும் பசுந்தீவனங்கள் இன்றியமையாதவை. மானாவாரி விவசாயிகளே கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள் பருவமழை காலங்களில் பசுந்தீவின வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது வழக்கம். பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதையொட்டி பழநி அருகே தும்பலப்பட்டி, புளியம்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி நிலங்களில் பசுந்தீவனங்கள் அதிகளவு வளர்க்கப்பட்டு வருகின்றன.