திண்டுக்கல், நவ. 5: வாக்குச்சாவடியை 3 கிமீ தூரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அழகர் சிங்கம்பட்டி மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அடுத்த செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்டது அழகர் சிங்கம்பட்டி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஊரின் அருகேயுள்ள சென்னமநாயக்கன்பட்டியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வந்தனர். இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதில் அழகர் சிங்கம்பட்டியை சேர்ந்த வாக்காளர்களுக்கு 3 கிமீ தூரத்தில் உள்ள கள்ளிப்பட்டி ஊரில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.