புதுச்சேரி, நவ. 1: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார், முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், காங்கிரஸ் துணை தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: இந்திராகாந்தி நாட்டை வல்லரசாக்கவும், வளர்ச்சியடைந்த நாடாக மாற்றவும் அரும்பாடுபட்டவர். நாட்டிலேயே தீவிரவாதத்துக்கு இரையான கட்சி காங்கிரஸ் தான். இந்திரா, ராஜீவ்காந்தி தீவிரவாதத்துக்கு இரையாகியுள்ளனர். இதுபோல மற்ற கட்சி தலைவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார்களா? தற்போது மத்தியிலும், பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. அவர்கள் நாட்டுக்காக என்ன செய்துள்ளார்கள். தென்னிந்தியாவில் பாஜகவை மக்கள் அதிகம் புரிந்து கொண்டுள்ளனர். வைத்திலிங்கம் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நினைத்தேன். ஆனால் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தோற்றதில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் கதை முடிந்து விட்டது. காமராஜர் நகர் தொகுதியில் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜான்குமார் வெற்றி பெறுவார் என நினைத்தேன்.