சிவகங்கை, அக். 31: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் கனமழையும், மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் மீண்டும் மழை பெய்தது. அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது. தீபாவளிக்கு சில நாட்கள் முன் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை கனமழை பெய்த நிலையில் காலை 8 மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரம் வெயில் அடித்தது. பின்னர் மீண்டும் 9 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மழையால் நகர்ப்பகுதிகள், சாலைகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.