கரூர், அக். 31: கரூர் வெங்கமேடு மேம்பால இறக்கத்தில் அடிக்கடி நிலவி வரும் சாலை விபத்தினை தடுக்க அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.கரூர் திண்டுக்கல் சாலையில் வெங்ககல்பட்டி அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கரூரில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருச்சி பைபாஸ் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வழியாக சென்று வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து ஒன்றில் பைக்கில் சென்ற முதியவர் இறந்தார். இதன் காரணமாக, திருச்சி பகுதியில் இருந்து கரூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் கரூர் பகுதிக்கு எளிதாக செல்ல இடதுபுறம் உள்ள சர்வீஸ் சாலையின் வழியாக சென்று வந்தன. இந்நிலையில், இந்த விபத்தின் காரணமாக, சர்வீஸ் சாலை இணைப்பு மூடப்பட்டது.இதன் காரணமாக, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து கரூர், தாந்தோணிமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பி சர்வீஸ் சாலையின் வழியாக வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் ஏறி திரும்பவும் கரூர் நோக்கி செல்லும் நிலையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.