பாகூர், அக். 27: பாகூர் அருகே உள்ள சித்ேதரி வாய்க்காலில் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கவர்னர் கிரண்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று காலை பாகூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சித்தேரி அணைக்கட்டுக்கு வந்தார். அப்போது, சித்தேரி அணைக்கட்டு, சித்தேரி வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் கரையோரம் உள்ள சாலையில் நடந்து சென்ற கவர்னர், குருவிநத்தம் தூக்குப்பாலம் வழியாக பாகூரை கடந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கன்னியக்கோவில் தாங்கல் வரை சென்று ஆய்வு செய்தார். அப்போது, நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்க வேண்டும். வாய்க்காலை தூர்வாரினால் தான் நீரை தேக்கி வைத்து சேமிக்க முடியும், என அதிகாரிகளிடம் தெரிவித்தார். தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றார்.