ஓசூர், அக்.25: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நந்திமலை, தொட்டப்பள்ளப்புரம், கே.ஆர்.புரம், பெங்களூரு மற்றும் சர்ஜபுரம் உள்ளிட்ட இடங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கெலவரப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 968 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே அளவில் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் மள மளவென உயர்ந்து வருகிறது. 44.28 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 41.66 அடியாக உள்ளது.