வில்லியனூர், அக். 25: வில்லியனூர் அருகே பைக்கில் சென்ற நபரை மடக்கி கத்தியால் வெட்டி ரூ.3 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, லாஸ்பேட்டை அருகே உள்ள பாக்கமுடையான்பட்டு முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (41). இவர் அடகு வைக்கப்படும் தங்க நகைகளை மீட்டு மறு அடகு வைத்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பாக்கமுடையான்பட்டில் இருந்து சிவராந்தகம் பகுதிக்கு ரூ.3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, வேலை நிமிர்த்தமாக ரமேஷ் பைக்கில் நேற்று மதியம் 12 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பங்கூரில் இருந்து சிவராந்தகம் செல்லும் ஏரிக்கரை சாலையில் ரமேஷ் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து இரண்டு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் ரமேஷை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணப்பையை பறிக்க முயன்றுள்ளனர். பிறகு சுதாரித்து கொண்ட ரமேஷ் பணப்பையை கொடுக்க மறுத்து கூச்சலிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர்கள் ரமேஷின் கையில் கத்தியால் வெட்டிவிட்டு அவரிடமிருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ைபக்கில் தப்பிச் சென்று விட்டனர்.