புதுச்சேரி, அக். 24: புதுச்சேரி மின்துறை நகரம் (இயக்குதலும் பராமரித்தலும்) பிரிவு செயற்பொறியாளர் கனியமுதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மழைக்காலங்களில் மின்விபத்துக்களை தவிர்க்க மின்கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு போன்றவற்றை கட்டக்கூடாது. மின்கம்பங்களில் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது. மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகிலுள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுகவும். மழைக்காலத்தில் இடி மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் நிற்கக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1912க்கு தெரிவிக்கலாம்.
இடி மின்னல் இருக்கும்போது டிவி, கம்ப்யூ–்டடர், கைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும், இத்தகைய மின்சாதனங்களின் இணைப்பு ஒயரை பிளக்கில் இருந்து அகற்றி வைக்க வேண்டும். மின்மாற்றிகள், மின்பெட்டிகள், மின்இழுவை கம்பிகள் ஆகியவற்றை தொடக்கூடாது. கனரக வாகனங்களை மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீயணைப்பு துறையின் உதவியை நாடவும். வீட்டில் சுவர்களில் மின்சாதனங்களில் மின்அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்ந்த ரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்சை அணைத்து விடவும் மின்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சைக்கிள் செயின், கம்பிகள், பச்சைக்கொடிகள், ஈரமான பூமாலை போன்றவற்றை மின்கம்பிகளில் தூக்கி எறிவது ஆபத்தை விளைவிக்கும்.