சேலம், அக். 24: சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் சீசன் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நகர பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதற்காக ரயில்களில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இது போக, கடைசி நேர பயணத்திற்காக அதிகப்படியானோர், ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார்கள். இதன் காரணமாக, ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும்.
இக்கூட்ட நெரிசலை பயன்படுத்தி , நகைப்பறிப்பு, உடமைகள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரயில்வே போலீசார், தனிப்படை அமைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே, தமிழ்நாடு அதிரடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், அந்தந்த பகுதி உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.