ராசிபுரம். அக்.23: சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் அடுத்த மதியம்பட்டியில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக தரைப்பாலம் உடைந்தது. ரசாயன நுரை பொங்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். சேலம் மாவட்டம் முழுவதுமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சேலம் மாநகர், கொண்டலாம்பட்டி பகுதியில் பெய்யும் மழையால் திருமணிமுத்தாற்றில் வழக்கத்தை காட்டிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மதியம்பட்டியில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது. இந்த பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. மழைகாலத்தில் திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, இப்பகுதியில் தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு சாயப்பட்டறை ரசாயன கழிவுகளால் வெள்ளை நிரத்தில் நுரை பொங்குவது வழக்கமாக உள்ளது.