அரவக்குறிச்சி, அக். 23: அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் கிராம மக்கள்
குடிநீர் இல்லாததால் மழைநீரை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. உடனடியாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென்று மனு அளிக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொன்னாவரம் கிராம மக்கள் திரண்டதால் பரபரபரப்பு ஏற்பட்டது.அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம் பொன்னாவரம் கிராமத்தில் சுமார் ஒரு மாத காலமாக காவிரி குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாய தோட்டங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். தோட்ட கிணறுகளிலும் தற்பொழுது தண்ணீர் குறைவின் காரணமாக தண்ணீர் மறுக்கப்படுவதால் பொதுமக்கள் ஒரு வாரமாக மழை நீரை பிடித்து தற்காலிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் பொன்னாவரம் கிராம மக்கள் திரண்டு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் சுப்பிரமணியிடம் முறையிட்டு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.