மஞ்சூர், அக.23: முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து நேற்று அப்பர்பவானி அணை திறந்து விடப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அப்பர்பவானி அணையானது மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ளது. 210 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. மஞ்சூர் சுற்றுப்புறங்களில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அணைக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்தது. இதனால் நேற்று காலை அப்பர்பவானி அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் அணை திறந்து விடப்பட்டது. அணையின் 2 மதகுகள் மூலம் வினாடிக்கு 260 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.