ஈரோடு, அக். 23: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், நடப்பாண்டில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டி உள்ளது. இனிவரும் உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்படும். இதுதொடர்பாக, பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு தண்டோரா போட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பாசனத்திற்கான நீர் தேவை இருக்காது. கடந்தாண்டு பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் 16 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது. கடலில் வீணாக வடியும் இந்த உபரிநீரை கீழ்பவானி பாசன கால்வாய் மூலமாக கொண்டு வந்து பாசன பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டை, கண்மாய்களை நிரப்பும் நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும்.