விக்கிரவாண்டி, அக். 18: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து விக்கிரவாண்டியில் தவாக சார்பில் நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசியதாவது:வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. மிகவும் பிற்படுத்தப்பட்ட 108 சாதிகளுக்கும் சேர்த்து 28 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கினார். ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். வன்னியர்களை மத்திய அமைச்சர்களாகவும், அரசு செயலர்களாகவும், அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராகவும், பல்கலைக்கழக துணை வேந்தராகவும் பணியமர்த்தி அழகு பார்த்தது திமுகதான்.