விருதுநகர், அக். 17: விருதுநகர் வழியாகச் செல்லும் அரசு விரைவு பஸ்கள், நகருக்குள் வராமல், புறநகர் வழியாகச் செல்வதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, விருதுநகர் வழியாகச் செல்லும் அனைத்து பஸ்களும், நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்க நிரந்தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகரின் வடக்கே திண்டுக்கல், பழனி, திருப்பூர், திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் நகரங்களுக்கும், தெற்கே கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு விருதுநகரில் இருந்து பஸ்வசதி கிடையாது.ஆனால், மேற்குறிப்பிட்ட ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் விருதுநகரின் புறநகர் பகுதி வழியாக சென்று வருகின்றன. ஆனால், நகருக்குள் பஸ்கள் வருவதில்லை. நகரைச் சேர்ந்த பயணிகளை ஏற்றி, இறக்குவதில்லை. விருதுநகரைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கு சென்று வரும் நிலையில், விருதுநகர் வழியாகச் செல்லும் பஸ்களில் ஏறி விருதுநகருக்கு டிக்கெட் கேட்டால் டிக்கெட் தர மறுக்கின்றனர். அதையும் மீறி ஏற்றப்படும் பயணிகள் தெற்கே கலெக்டர் அலுவலகம், வடக்கே அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இறக்கி விடப்படுகின்றனர். விருதுநகரைச் சேர்ந்த பயணிகள் பஸ்களில் ஏறி டிக்கெட் எடுப்பதற்கு முன்பாக பெரிய போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை தொடர்கிறது.