கவர்னர் கூட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து சாவு

புதுச்சேரி, அக். 16:  புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள இரண்டுநாள் பயணமாக கவர்னர் கிரண்பேடி சென்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த பாதுகாப்புடன் ஆய்வை கிரண்பேடி தொடர்ந்தார்.  பின்னர் மாலையில் ஏனாம் மண்டல அதிகாரி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் புள்ளியியல் துறை ஆய்வாளராக பணிபுரியும் அப்பாராவ்  கழிவறையில் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் இவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தகவலறிந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அலுவலகத்தின் வாயில் முன் திரண்டனர். இது குறித்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறுகையில், இலவச அரிசி, ஏனாம் ஜிப்மர் மருத்துவமனை கிளை, வெள்ளத்தடுப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், ஏனாம் மக்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்துவேன் என்றார்.

Related Stories: