நாமக்கல், அக்.15: நாமக்கல் அருகே, கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரும் பழுதடைந்து விட்டதால், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி சிரமப்பட்டு வருவதாக, முசிறி காட்டுப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த முசிறி அருகே உள்ள காட்டுப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்: முசிறி அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில், காவிரி குடிநீர் விநியோகம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிறுத்தப்பட்டு விட்டது. ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரும் பழுதடைந்துவிட்டது. இதனால் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது. காலை நேரத்தில் விவசாய கிணறுகளுக்கும், ஏளூர் ஊராட்சி பகுதிக்கும் டூவீலரில் சென்று குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகிறோம்.