சேலம், அக்.15: சேலம்-கரூர்-திருச்சி இடையே சிறப்பு பாசஞ்சர் ரயிலாக இயக்கப்படும் ரயிலை ரெகுலர் ரயிலாக அறிவித்து, அதன் இயக்கத்தை இன்று (15ம்தேதி) ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கி வைக்கிறார்.
சேலம்-நாமக்கல்-கரூர் இடையே 85 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த புதிய வழித்தடத்தில் சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் (இரு மார்க்கத்தில் 4 சேவை), இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை-பழனி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை துரந்தோ ரயில் உள்ளிட்டவையும் இம்மார்க்கத்தில் செல்கிறது. இதுபோக திருச்சி-கரூர் பாசஞ்சர் ரயில், கடந்த 7 மாதத்திற்கு முன் சேலம் வரை நீட்டிக்கப்பட்டு, கரூர்-சேலம் சிறப்பு பாசஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. இந்த சிறப்பு பாசஞ்சர் ரயில், திருச்சியில் இருந்து கரூருக்கு வந்ததும், காலை 11.40 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு மதியம் 1.25 மணிக்கு வந்து சேர்கிறது. மறுமார்க்கத்தில் சேலத்தில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு நாமக்கல் வழியே கரூருக்கு பிற்பகல் 3.25 மணிக்கு சென்றடைகிறது. அதன்பின் அந்த ரயில், கரூரில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறது.