காங்கயம், அக். 15: காங்கயம் தாலுகா அலுவலகத்தில் அரசு ஊழியர்களே மின்சாரத்தை வீணடித்து வருகின்றனர். அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின் சிக்கனத்தை வலியுறுத்தி அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டிய அரசு அதிகாரிகள் சிலரின் ஒழுங்கீன நடவடிக்கையால் அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காங்கயம் - கோவை சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் அறையில் இல்லாதபோது வீணாக மின் விளக்குகள், மின் விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. மின் விசிறி ஓடிக் கொண்டிருந்ததை பார்த்த மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.