கல்பாக்கம் அருகே உர வியாபாரி வீட்டிற்குள் புகுந்து 12 சவரன் நகை, பணம் கொள்ளை

திருக்கழுக்குன்றம், அக். 15: கல்பாக்கம் அருகே உர வியாபாரி வீட்டில் 12 சவரன் நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (32). இவர் அணுபுரம் பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வீடு திரும்பினார். பின்னர், வீட்டுக் கதவை காற்றுக்காக திறந்து வைத்து, முருகன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்குள் மர்ம நபர்கள் ஓடும் சத்தம் கேட்டு முருகனும், அவரது மனைவியும் திடுக்கிட்டு எழுந்தனர்.

பின்னர், முருகன் மர்ம நபர்களை பிடிக்க துரத்தினார். ஆனாலும், மர்ம கும்பல் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, அவர் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 12 சவரன் நகைகள், ₹5 ஆயிரம் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது முகனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசில் முருகன் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள், மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: