தேனி, அக். 10: தேனியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கழிப்பிட வசதிகள் இல்லாமல் தவிக்கும் பல்வேறு குடியிருப்புகளின் பொதுமக்கள், கரட்டுப்பகுதியை குடியிருப்பாக பயன்படுத்தி வருகின்றனர். தேனியில் சமதர்மபுரம், எம்ஜிஆர் நகர், சிவராம்நகர், கக்கன்ஜிகாலனி, விஸ்வநாததாஸ் காலனி குடியிருப்புகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகள் அனைத்தும் தேனியின் வால்கரடு மலைப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இந்த குடியிருப்புகள் அமைந்த நாள் முதல் குறிப்பாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடியிருப்பு பகுதிகளின் மக்கள் வால்கரடு மலைப்பகுதியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் கக்கன்ஜிகாலனி, விஸ்வநாததாஸ் காலனி பகுதியில் கூட கழிப்பிடம் கட்ட இட வசதி உண்டு. நகராட்சி இந்த பகுதிகளில் ஓரளவு வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. ஆனால் சமதர்மபுரம், எம்ஜிஆர் நகர், சிவராம்நகர் பகுதிகளில் பொதுக்கழிப்பிடம் கட்ட போதிய இட வசதிகள் இல்லை. இவர்கள் வால்கரடு பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.