திருப்பூர்,அக்.10:திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில், கொசு உருவாகும் விதத்தில் தண்ணீர் சேமித்து வைத்துள்ளதாக கூறி, தண்ணீரை தரையில் கொட்டிய சுகாதார பணியாளர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டுக்குட்பட்ட தென்னம்பாளையம் காலனி முத்துசாமி லே-அவுட் பட்டுக் கோட்டையார் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக நேற்று காலை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்ட சுகாதார பணியாளர்கள் கொசு உருவாகும் வகையில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி, சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை தரையில் கொட்டியதாக தெரிகிறது. பின்னர், அந்த பகுதியில், ஆள் இல்லாமல் இருந்த குடியிருப்புகளுக்கு சென்ற பணியாளர்கள், மூதாட்டி ஒருவரின் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.