திருப்பூர், அக்.10: திருப்பூர் பழைய பஸ் நிலையத்தின் தென்பகுதியில் முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த பள்ளியை காலி செய்துவிட்டு பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இவர்களின் எதிர்ப்பையும் மீறி இப்பள்ளியை கே.எஸ்.சி. அரசு பள்ளி பின்புறம் உள்ள மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவில் பிறப்பு மற்றும் இறப்பு அலுவலக வளாகத்தில் இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் கட்டிடப் பணிகளும் வெகுவேகமாக நடைபெற்று வருகின்றன. 15 நாட்களுக்குள் கட்டிடப் பணிகள் முழுமை அடைந்துவிடும். ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரையாக அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.