அம்பையில் ஒரே நாளில் அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

அம்பை. அக். 10:  அம்பையில் அடுத்தடுத்த வீடுகளில் ஒரே நாளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அம்பை சம்பந்தர் தெருவை சேர்ந்த கணேஷ் சுப்பிரமணியன் (40), தனியார் பள்ளியில் தோட்டப் பணியாளராக உள்ளார். இவர் மற்றும் இவரது உறவினர்கள் கணபதி மகன் பகவதி மற்றும் பாலசுப்பிரமணியன் மனைவி முத்துலெட்சுமி ஆகியோர் ஒரே காம்பவுண்டில் குடியிருந்து வருகின்றனர். ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் மனைவி முத்துலட்சுமி திருச்சி சென்றுள்ளார். பகவதி வி.கே.புரம் சென்றார். கணேஷ் சுப்பிரமணியன் அம்பலவாணபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். 3 குடும்பத்தினரும் வெளியூர் சென்றதால் காம்பவுண்ட் கதவும் பூட்டப்பட்டு இருந்தது.  நேற்று முன்தினம் கணேஷ் சுப்பிரமணியன் வீடு திரும்பினார். அப்போது காம்பவுண்ட் சுவர் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், 12 கிராம் தங்கநகை கொள்ளை போனது தெரியவந்தது.

இதேபோல் பகவதி வீட்டிலும் கதவு உடைக்கப்பட்டு ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம், 6 கிராம் தங்க நகை திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து கணேஷ் சுப்பிரமணியன், பகவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.  மேலும் இதே பகுதியில் மேலும் 3 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Related Stories: