புதுச்சேரி, அக். 10: மூன்றாண்டுகளில் மூவாயிரம் கோடி கடன் வாங்கி நாராயணசாமி அரசு சாதனை படைத்திருப்பதாக கோகுலகிருஷ்ணன் எம்பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காமராஜர் நகர் இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பின்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் புதுச்சேரியின் நிதி சிக்கல்களுக்கு ரங்கசாமிதான் காரணமென கூறியிருக்கிறார். மத்திய அரசு போதுமான நிதியைத் தரவில்லையென எதுவும் புரியாமல் பேசுகிறார். ஸ்மார்ட் சிட்டிக்கு ரூ.1850 கோடி, அம்ருத் திட்டத்தில் ரூ.60 கோடி, குடிநீர் திட்டத்துக்கு ரூ.500 கோடி, சேதராப்பட்டு உறுப்பு மாற்று மையத்துக்கு ரூ.1200 கோடி, சுற்றுலா மேம்பாடுக்கு ரூ.200 கோடி, சாகர் மாலா திட்டத்துக்கு ரூ.84 கோடி, கிழக்கு கடற்கரை ரயில் பாதைக்கு ரூ.2600 கோடி என சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரிக்கு ரூ.7200 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 12,984 பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், 3,63,355 பேருக்கு முத்ரா கடன் ஆண்டுக்கு ரூ.330 மட்டுமே செலுத்தி, ரூ.2 லட்சம் பேருகு ஆயுள் காப்பீடு என மத்திய அரசின் நிதியால், மக்களுக்குக் கிடைத்த நன்மைகள்.இந்த டெல்லி நிலவரம் எல்லாம் புரியாமல் டெல்லி பிரதிநிதியாக இருந்தவர்தான் ஜான்குமார். அவருக்கு உள்ளூர் நிதி நிலவரம் கூட தெரியாது என்பதுதான் வேதனை. 2007ம் ஆண்டு புதுச்சேரி அரசை பொதுக் கணக்கு துவங்க வைத்தது, மத்திய காங்கிரஸ் அரசுதான், அதுமட்டுமா? ரூ.2167 கோடியைத் தள்ளுபடி செய்யாமலே கணக்கு ஆரம்பிக்க வைத்து, புதுச்சேரியை புதைகுழியில் தள்ளியதற்கு காங்கிரஸ்தானே காரணம்.