செவிலியர் கல்லூரி காலி இடங்களில் காரைக்கால் மாணவர்களை சேர்க்க வேண்டும்

காரைக்கால், அக். 10:  புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான நாஜிம் நிருபர்களிடம் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் இயங்கிவரும் அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், காலியாக உள்ள  டிஜிஎன்எம்  பிரிவில் 3 இடங்களுக்கும், டிஎம்எல்டி பிரிவில் 4 இடங்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் மாப் அப் முறையில் கவுன்சலிங் நடந்தது.மாணவர்கள் தங்களது பெயரை பதிவு செய்தும் காலியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. அந்த இடங்களில் சேர காரைக்கால் மாணவர்கள் தயாராக இருக்கும் சூழலில், ஏன் அவர்களுக்கு இதுவரை சேர்க்கை அனுமதி கொடுக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, காலியாக இருக்கும் இடங்களை தகுதியான காரைக்கால் மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

காரைக்கால் அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை சரியான முறையில் செலவு செய்யப்படவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனவே, அத்தொகையை முறையாக செலவு செய்து மக்களுக்கு பயனுள்ள வகையில் மருத்துவமனையை மேம்படுத்த ஏதுவாக, அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், கலெக்டர், சமூக அமைப்புகளைச் சேர்ந்த சிறப்பு குழு ஒன்றை அமைக்க முன்வர வேண்டும் என்றார்.

Related Stories: