திருவாரூர், அக். 9: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஆயித்து837 யூனிட் சவுடு மண் பதுக்கி வைத்திருந்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆற்று மணல் கடத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு பொதுப்பணி துறை, வருவாய் துறை மற்றும் போலீசார் என சம்பந்தப்பட்ட துறையினர் எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சவுடு மண் என்ற பெயரில் அனுமதி பெற்று ஆற்றுமணல் கடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சவுடு மண் வெட்டி எடுப்பதற்கு அரசு மூலம் மூன்று மீட்டர் (10 அடி) ஆழத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் நிலையில் அதனை மீறி 25 அடி , 30அடி என பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது.மேலும் ஒருமுறை மட்டுமே அரசிடம் அனுமதி பெறப்பட்டு தொடர்ந்து பல ஆண்டுகள் வரையில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இந்த சவுடு மண் வெட்டி எடுக்கப்படும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் தொடர்ந்து இதே போன்று சவுடு மண் என்ற பெயரில் மணல் வெட்டி எடுக்கப்பட்டு தொடர்ந்து சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு இந்த மண் கடத்தப்பட்டு வருவது கடந்த பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.