வத்திராயிருப்பு, அக். 9: விஜயதசமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலிலில் உள்ள ஆனந்தவள்ளி அம்மன் சன்னதியில் 10ம் நாளான நேற்று அம்பு போடும் நிகழ்வு நடந்தது. இதைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆனந்தவள்ளி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு நவராத்திரி விழாவையொட்டி, கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு முதல் நாள் கொலு, பஜனை சிறப்பு வழிபாடு தொடங்கியது. அன்று இரவில் பெய்த மழையால் அருவி, ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, கடந்த செப்.30ம் தேதி முதல் அக்.4ம் தேதி வரை சதுரகிரியில் தரிசனம் செய்ய அனுமதியில்லை.