திருப்பூர், அக்.4: திருப்பூரில் பெண்களுக்கு ரூ.2 கோடி 10 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் நேற்று வழங்கப்பட்டது.திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 10 மற்றும் 12ம் வகுப்பு, பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த 295 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியினையும் மற்றும் திருமாங்கல்யத்திற்கு தலா 8 கிராம் வீதம் ரூ.79,58,203 என மொத்தம் ரூ.2,10,58,203 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ குணசேகரன் வழங்கினார். விழாவில், கலெக்டரின் நேர்முக உதவியாளார் (பொது)சாகுல் ஹமீது, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை பெறுவதற்காக பயனாளிகள் நேற்று காலை 9 மணி முதல் மதியம் வரை காத்திருந்தனர். இவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படாததால் கலெக்டர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயிலின் வழியை மறைத்து அமர்ந்திருந்தனர். இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்பு, கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டத்தை சற்று சரி செய்தனர்.