உடுமலை, அக்.4: நாடு முழுவதும் தற்போத நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சரஸ்வதிபூஜை, ஆயுத பூஜை வரஉள்ளதால் பொரி உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஆர்டர்கள் இல்லாததால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் போது வீடுகள், கோயில்கள், ஒர்க்ஷாப்கள், விசைத்தறி கூடங்கள், பின்னலாடை நிறுவனங்கள், கடைகள் என அனைத்து தொழில் நிறுவனங்களிலும் அவல், பொரி, கடலை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் நவராத்திரியின் போது வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் பிரசாதமாக சர்க்கரை பொங்கல், தேங்காய், பழம், பொரி வழங்குவர்.பண்டிகை கால பூஜை பொருட்களில் ஒன்றாக பொரி இடம் பிடித்துள்ளதால் தற்போது பொரி உற்பத்தி அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம், ஏரிப்பாளையம், செங்கப்பள்ளி, அவிநாசி ஆகிய பகுதிகளில் பொரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பொரி உற்பத்திக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து தேங்காய் பூ சம்பா என்ற ரக அரிசியை வாங்கி அவற்றை ஊற வைத்து அடுப்பில் பொரியாக வறுத்தெடுக்கின்றனர். நவராத்திரியையொட்டி ஒவ்வொரு பொரி ஆலைகளிலும் தினமும் ஒரு டன் அரிசியை பொரியாக வறுத்தெடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, மதுரை, தேனி, தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மூட்டைகள் கட்டி அனுப்பி வருகின்றனர்.55 பக்கா அளவு கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.350க்கும், ஒரு பக்கா ரூ.10க்கும் மொத்த விலைக்கு கடைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு பக்கா பொரி ரூ.7க்கு விற்ற நிலையில் தற்போது விலைவாசி உயர்வு, எரிபொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு பக்கா ஒன்றிற்கு ரூ.3 விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பொரி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.