திருச்செங்கோடு அருகே பட்டப்பகலில் நகை, பணம் கொள்ளை

திருச்செங்கோடு,  அக். 4:  திருச்செங்கோடு அருகே, போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டின்  பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த பத்தே முக்கால் பவுன்  நகை, ₹15 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றனர்.

திருச்செங்கோடு தாலுகா  எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் ஆசிரியர் குடியிருப்பில் வசிப்பவர்  ஸ்ரீதர் (42). இவரது மனைவி உமாமகேஸ்வரி(40). ஸ்ரீதர் எலச்சிபாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.  நேற்று காலை மகன் பள்ளிக்கு சென்று விட்டார். கணவன், மனைவி இருவரும், 9  மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, எலச்சிபாளையம் ஸ்டுடியோவிற்கு  சென்றுவிட்டனர். மதியம் 1 மணியளவில் இருவரும் வீட்டிற்கு சாப்பிட  சென்றுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்தது  கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பீரோ  உடைக்கப்பட்டு துணிகள்  சிதறி கிடந்தன. மேலும் உள்ளே வைத்திருந்த செயின், மோதிரம், வளையல் என பத்தே  முக்கால் பவுன் நகைகள் மற்றும் ₹15 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து  ஸ்ரீதர் எலச்சிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு  வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை  சேகரித்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: