வில்லியனூர், அக். 4: புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் வீடு வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியில் உள்ளது. இவர் ேநற்று காலை சொந்த வேலை காரணமாக சேலம் சென்றுவிட்டு மாலை 6 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது 1031 என்ற கவர்னர் மாளிகையின் புகார் எண்ணுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து கண்காணிப்பு அறையில் இருந்து அமைச்சர் மற்றும் வெடிகுண்டு பரிசோதனை நிலையம், வில்லியனூர் காவல் நிலையம் ஆகியவற்றிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மேற்கு எஸ்பி ரங்கநாதன், தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சரண்யா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழு எஸ்பி ரகுநாயகம் தலைமையில் வெடிகுண்டு பரிசோதனை குழு மோப்பநாய் ரேம்போ, ஜோட்டோ ஆகியவற்றுடன் அமைச்சர் வீட்டிற்கு வந்து பரிசோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் நமச்சிவாயத்தின் வீடு, அறை, தோட்டம், கார் ஷெட், கார் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. எங்கேயும் வெடிகுண்டு இல்லை. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள மற்றொரு வீட்டுக்கு வெடிகுண்டு பரிசோதனை குழு விரைந்தது. பிறகு கண்காணிப்பு அறைக்கு வந்த எண்ணை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அந்த எண் புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் சிக்னல் காட்டியதாக தெரியவந்தது.