திண்டுக்கல், அக்.4: திண்டுக்கல் கலெக்டர் விஜயலெட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு: படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஜெராக்ஸ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம். இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்போர் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தொலைபேசி(0451-2461498) வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படும்.
முகாமில் கலந்துகொள்ளும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் பதிவில் விடுபாடுகள் மற்றும் குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக சரிசெய்து தரப்படும். எனவே, தகுதியுடைய பதிவுதாரர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.