ஈரோடு, அக். 2: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பஸ் ஸ்டாண்ட், ஆர்கேவி ரோடு, காவிரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளது. இந்த வணிக வளாகங்கள் ஒவ்வொரு பகுதிக்கு தகுந்தாற்போல ஏலம் விடப்பட்டு வருகிறது. இதற்கான வாடகையை நிர்ணயம செய்து மாநகராட்சி ஏலத்தை நடத்தி வருகிறது. கடைகளை வாடகைக்கு எடுப்பவர்கள் நீண்ட காலமாக வாடகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். மாநகராட்சி சார்பில் வாடகை பாக்கி தொடர்பாக பட்டியல் தயாரிக்கப்பட்டு கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பல மாதமாக வாடகை பாக்கி தொகையை செலுத்தாமல் உள்ளனர். சுமார் 204 கடைகளுக்கு 35 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியாக உள்ளது.இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கடைக்காரர்கள் கண்டுகொள்வதில்லை. வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்து சீல் வைக்க மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.