ஊட்டி, அக். 2: நீலகிரி மாவட்டத்தில் ரூ.45.51 கோடி மதிப்பீட்டில் காய்கறிகள் பாதுகாப்பாக வைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் மையங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விவசாயிகளும் விற்பனை வாய்ப்பில் சிறந்து விளங்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு விநிேயாகத் தொடர் மேலாண்மை திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் ரூ.45.51 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊட்டி வட்டாரத்தில் ஒசஹட்டி, தாவணெ, அணிக்கொரை ஆகிய இடங்களிலும், குன்னூர் வட்டாரத்தில் நியூ அல்லஞ்சி, கோத்தகிரி வட்டாரத்தில் சுள்ளிகூடு ஆகிய இடங்களிலும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற வேர் காய்கறிகளுக்கான முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடலூர் வட்டாரத்தில் உப்பட்டி, அய்யன்கொல்லி ஆகிய இடங்களில் வாழைக்கான பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோத்தகிரியில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் சைனீஸ் காய்கறிகளுக்கான பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் ரோஜா பூங்கா வளாகத்தில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள குளிர் பதன கிடங்கும் உள்ளது.