குளித்தலை, அக். 2: தமிழக அரசு அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர் கூட்டத்திற்கு குறிப்பிட்ட தேதியை அறிவித்து அனைத்து துறை அலுவலர்களையும் வரவழைத்து குளித்தலை.கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையாக நடத்த வேண்டும். மாநில வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவின்படி வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை மாதாமாதம் தகவல் பலகையில் ஒட்ட உத்தரவிட வேண்டும்.மாநில நிர்வாக ஆணையர் உத்தரவின்படி உதவித்தொகை பெற்றிட ஏடிஎம் கார்டு வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறும் மனவளர்ச்சி குன்றியோர், தசைசிதைவு, தொழு நோய் பாதி தோல் 75 சதவீதத்துக்கும் மேல் பாதித்த உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டோருக்கு தற்போதைய உதவித்தொகையை நிறுத்தாமல் மாற்றுத்திறனாளி துறை வழங்கும் ரூபாய் 1500ஐ மாற்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீடில்லா மாற்றுத்திறனாளி இடம்பெற்றுள்ள குடும்பங்களுக்கு அரசாணையின்படி பசுமை வீடு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டங்களில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான கரூர் மாவட்ட குழு சார்பில் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.