புதுச்சேரி, அக். 2: புதுச்சேரியில் ஓட்டல், லாட்ஜ், பஞ்சர் கடைகளில் மலேரியா குழுவினர் அதிரடி களஆய்வு மேற்கொண்டு கொசு, புழு உற்பத்தியை கண்டறிந்து அழித்தனர். புதுச்சேரி அரசு நலவழித்துறையின் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மற்றும் குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புதிய பேருந்து நிலையம், மறைமலையடிகள் சாலையில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு, புழுக்களை கண்டறிந்து அழிக்கும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று காலை நடந்தது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அஜ்மல் அகமது தலைமை தாங்கினார். தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட மாநில அதிகாரி சுந்தர்ராஜ், மலேரியா உதவி இயக்குனர் கணேசன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், நகராட்சி மருத்துவ அதிகாரி கதிரேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் பேருந்து நிலைய பகுதிகளில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர்.