விருத்தாசலம், அக். 1: விருத்தாசலத்தில், தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரி மழை நீரில் நின்றுகொண்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட செல்வராஜ் நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவேகானந்தர் வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீர் அனைத்தும் வெளியே செல்ல வழி இன்றி தெருவிலேயே தேங்கி நிற்பதால், பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மழைநீர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீரும் ஒன்றாய் கலந்து தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் உருவாகும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி உணவு அருந்த முடியாத சூழ்நிலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் அன்றாடம் பல்வேறு பணிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மெயின் ரோடு பகுதிக்கு சென்றடைகின்றனர்.