அம்பை, அக்.1: அம்பை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ராதாவுக்கு சென்னையில் நடந்த விழாவில் சிறந்த புலனாய்வுத்துறை அதிகாரிக்கான விருது சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.இவர் கடந்த 2016ம் ஆண்டு குமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் போது கூடுதல் பொறுப்பாக தக்கலை காவல் நிலையத்தையும் கவனித்து வந்தார். இந்நிலையில் 2009ம் ஆண்டு குமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளியாடியில் சுதா என்ற பெண் தனது கணவன் ராஜசேகரனை கொலை செய்து செப்டிக் டேங்கில் உடலை வீசி விட்டு வெளிநாடு சென்றதாக நாடகமாடியதாகவும் அதற்கு உடந்தையாக இருந்த வாலிபரையும் இன்ஸ்பெக்டர் ராதா கைது செய்தார். மேலும் கொலை நடந்து 7ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக செயல்பட்டார். இன்ஸ்பெக்டர் ராதா தற்போது அம்பை மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.