திருவொற்றியூர்: மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள சிஎம்டிஏ வாகன நிறுத்த மைய சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் அபாயம் உள்ளது. மாதவரம் மேம்பாலம் அருகே சிஎம்டிஏ வாகன நிறுத்த மையம் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்படுவதோடு, நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த வாகன நிறுத்த மையத்தில் உள்ள சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அதிக பாரங்களை ஏற்றி வரும் லாரிகள் இந்த சாலையில் சீராக செல்ல சிரமப்படுவதோடு, மேடான பகுதியில் கார்கள் ஏறி இறங்கும்போது, பள்ளத்தில் சிக்கி பழுதாகி விடுகின்றன. அதுமட்டுமன்றி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.