ஆத்தூர், செப்.30: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை இல்லாததால், காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது, போதிய மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் சிகிச்சை பெறமுடியால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக, ஆத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதிப்புடன் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். போதிய மருத்துவர்கள் இல்லாததால், நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறவேண்டி உள்ளது.