உத்திரமேரூர் அருகே இருளில் மூழ்கிய தெருக்கள்

உத்திரமேரூர், செப். 25: உத்திரமேரூர் அடுத்த பொற்பந்தல் ஊராட்சி கிடங்கரை கிராமத்தில் 6 தெருக்கள் உள்ளன. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் விவசாய கூலிவேலை  மட்டுமே செய்கின்றனர்.

இங்குள்ள தெரு விளக்குகள் இரவு நேரங்களில் சரிவர எரிவதில்லை. இரவு முழுவதும் கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது. இதையொட்டி, பல்வேறு பணிகளுக்காக வெளியே செல்பவர்கள், இரவு நேரத்தில் வீடு திரும்ப கடும் சிரமம்  அடைகின்றனர்.

மேலும் வீடுகளுக்கு அருகே விவசாய நிலங்கள் உள்ளதால், இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், சாலையில் ஒருவித பயத்துடன் நடந்து செல்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள், சம்பந்தபட்ட  அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், கிடங்கரை கிராமத்தில் உள்ள தெருவிளக்குகளை சீரமைத்து, தினமும் எரிய செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: