உடுமலை,செப்.20: உடுமலையில் புதிதாக துவங்க உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் துவங்கியது. ஏராளமான பெற்றோர் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். உடுமலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே வகுப்புகள் துவங்கி நடைபெற உள்ளது. தற்போது ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இந்த பள்ளி செயல்படுகிறது. முதல்கட்டமாக பொறுப்பு முதல்வர், 4 ஆசிரியர்கள், ஒரு உதவி சூப்பிரண்டு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வகுப்புக்கு 40 பேர் வீதம் மொத்தம் 200 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் விநியோகம் நேற்று துவங்கியது. உடுமலை கேந்திரியா வித்யாலயா பள்ளி முதல்வர் (பொறுப்பு) மேகநாதன் விண்ணப்பம் விநியோகத்தை துவங்கி வைத்தார்.